ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் மீண்டும் கூர்மையாக அதிகரித்துவரும் நிலையில் பல நாடுகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கடுமையாக்கி வருகின்றன.
தொற்று நோய் தீவிரமாகி வரும் நிலையில் பாடசாலைகள், பார்கள் மற்றும் களியாட்ட விடுதிகளை 3 வாரங்களுக்கு மூடுவதாக செக் குடியரசு அறிவித்துள்ளது.
நெதர்லாந்தில் சில பகுதிகளில் சமூக முடக்கல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உட்புற இடங்களில் முக கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், பல ஐரோப்பிய நாடுகளில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர் எண்ணிக்கை மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது.
பாரிஸில் உள்ள மருத்துவமனைகளில் அடுத்த வார இறுதிக்குள் 90% தீவிர சிகிச்சை படுக்கைகள் நிரப்பக்கூடும் என பொது மருத்துவமனை குழு (APHP) தலைவர் மார்ட்டின் ஹிர்ஷ் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் இன்று புதன்கிழமை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மேலதிக கட்டுப்பாடுகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரிஸ் உள்ளிட்ட தொற்று நோய் மையமாகக் கருதப்படும் நகரங்களில் இன்று ஊரங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரிட்டனிலும் தொற்று நோய் மீண்டும் தீவிரமடைந்துவரும் நிலையில் பகுதி அளவில் புதிய சமூக முடக்கல்களை அறிவிக்க அந்நாடும் தயாராகி வருகிறது.
இதேவேளை, ஐரோப்பாவின் நிலைமையை மிகுந்த அக்கறையுடன் கவனித்து வருவதாக ஜேர்மன் சாஞ்சலர் அங்கேலா மேர்க்கெல் கூறினார். அங்கு நிலைமை தொடர்ந்து தீவிரமாகி வருவதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.